புதன், 8 ஜூலை, 2020

குவைத் இந்திய தமிழ் செவிலியர்கள் சங்கத்தின் செம்மையான செயல்பாடுகள்..!

குவைத்தில் ஆயிரக்கணக்கான இந்திய நர்சுகள் சேவையாற்றி வருகிறார்கள். இதில் வழக்கம் போல மலையாளிகளுக்கு அடுத்து தமிழ் நர்சுகளும் குவைத்தில் மருத்துவம் சார்ந்த வசதி இல்லாமலும், முறையான சிகிச்சை வழி தெரியாமலும் அல்லாடும் தொழிலாளர்களுக்கு இந்த அமைப்பு ஒரு கலங்கரை விளக்கு போல உதவி வருகிறது.

இந்த அமைப்பு கடந்த 2015 ஆம் ஆண்டு வரை ஆண் மற்றும் பெண் என இருவேறு தோழமை குழுக்களாக செயல்பட்டு வந்தது. பிறகு இவை இரண்டும் ஒன்றாக இணைந்து இந்திய தமிழ் செவிலியர்கள் குழுமமாக என உருபெற்றது. 

இதில் சுமார் 300 உறுப்பினர்கள் உள்ளனர். தலைவராக திருமதி ஜோஸ்பின் மேரி, புரவலராக திருமதி மார்த்தாள் ஜான்சன், ஆலோசகராக திரு அமீர், செயலாளராக திரு இராமஜெயம், துணை செயலாளராக திருமதி தேன்மொழி, துணை தலைவராக திருமதி உஷா மற்றும் திரு ஜஸ்டின், பொருளாளராக திருமதி ஐரின் செல்டா மற்றும் திரு மோகன், ஒருங்கிணைப்பாளர்களாக திருமதி சுபலட்சுமி, திரு பெபின், திரு செல்வபாண்டியன், திரு ஐயப்பன் , ஊடக செயலாளராக திரு கிங்ஸ்லி மற்றும் திரு கோபு ஆகியோர் உள்ளனர்.

இந்த குழுமம் இங்குள்ள தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி அனைத்து நாட்டவர்களும் பயனடையும் விதமாக மிகவும் சிறப்புடன் மருத்துவ உதவிகள் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்திவருகிறது. 

இந்த குழு இயலாதவர்களுக்கு  இலவச மருத்துவ உதவி வழங்கும் விதமாக 2016-ம் ஆண்டு முதல் மே 12 அன்று ஒவ்வொரு ஆண்டும் உலக செவிலியர்கள் தினத்தை சிறப்பான முறையில் கொண்டாடி வருகிறது.

என்னதான் இருந்தாலும் வெளிநாட்டினர்களுக்கு மருத்துவமனையில் சிறப்பு கவனம் கிடைப்பது என்பது சிரமமே. வழி தெரியாமல் வரும் இந்தியர்கள் அதிலும் குறிப்பாக தமிழக மக்களுக்கு இவர்கள் தனி அக்கறையுடன் கவனம் செலுத்தி அதிலிருந்து மீண்டு வர மனதளவில் ஆறுதலும் நம்பிக்கையும் இக் குழுவில் உள்ளவர்கள் தருகிறார்கள். 

குறிப்பாக ஆலோசனைகர் திரு அமீர் வழிகாட்டுதலின்படி திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம், குவைத் தமிழோசை கவிஞர் மன்றம் போன்றவற்றுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம்களை இக்குழு நடத்தி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தை திருநாளை முன்னிட்டு குவைத்தில் உள்ள சில தமிழ் அமைப்புகள் நடத்தும் கபடி போட்டி நிகழ்வில் இவர்கள் விழா முடியும் வரை இக்குழுவில் உள்ளவர்கள் முதலுதவி குழுவாக செயல்பட்டு வருகிறார்கள்.

மருத்துவமனை மரணங்களுக்கு அப்பாற்பட்டு, வேலைக்கு வந்த இடத்தில் நம் மக்களுக்கு எதிர்பாராதவிதமாக ஏற்படும் மரணங்கள் நம்மை திக்குமுக்காட வைக்கின்றன. அவற்றில் பலரும் ஆதரவற்றவர்கள். அந்த சம்பவங்கள் மனதை கசக்கி பிழிபவைகள். 

இறுதி மரியாதைக்காக தாயகம் கொண்டுச் செல்ல இந்திய தூதரகம் மற்றும் குவைத் அரசாங்கம் என அத்துனை நடைமுறை செயல்களையும் சட்ட்டப்பூர்வமாக செய்து விரைவில் தாயகம் கொண்டுச் செல்ல இந்த அமைப்பு உதவி வருகிறது. 

அத்துடன் அங்கு விமான நிலையத்திலிருந்து உடலை சொந்த ஊர்களுக்கு எடுத்து செல்ல இலவச ஆம்புலன்ஸும் ஏற்பாடு செய்கிறது. இந்த செயல்களுக்காக இதன் செயலாளர் இராமஜெயம் மற்றும் இந்தியன் ஃபிரண்ட்லைனர் சேவை அமைப்பின் செயலாளளர் கீரணி மதி ஆகிய இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.

கொரோனா காலகட்ட தொற்றுநோய் நம்மையும் ஆட்டிபடைக்கின்ற இந்த தருணத்தில் முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக பசி பட்டினி மற்றும் வேலையில்லா திண்டாட்டம் குவைத்திலும் தலைவிரித்தாடிவருகிறது. 

மக்களின் நலன்கருதி இவர்களுடைய மருத்துவ வேலைபளுவுக்கு மத்தியில் செவிலியர்களின் பங்களிப்போடு சுமார் ஒரு இலட்சம் மதிப்புள்ள உணவு பொருட்களை குவைத் மட்டுமின்றி தமிழகத்திலும் இச்சங்கம் வழங்கி உள்ளது.

விசா புதுப்பிக்காமல் சட்டத்திற்கு புறம்பாக தங்கி இருந்தவர்களுக்கு சமீபத்தில் குவைத் அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கிய காலகட்டத்தில் இந்த சங்கம் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்து இந்திய தூதரக உதவியுடன் தாயகத்திற்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்துள்ளதும் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.

மேலும் குவைத்தில் மரணிப்பவர்களின் உடல்களை ஊருக்கு அனுப்புவதுடன் அவர்களின் குடும்பங்களுக்கும், பிள்ளைகளின் படிப்புக்கும் இந்த சங்கம் உதவி வருகிறது.

இது தவிர மருத்துவ உதவி ,ஏழைகளின் கல்வி, காஜா புயல் நிவாரணம் என பல லட்ச ரூபாய்கள் இந்த அமைப்பு வழங்கி உள்ளது. செவிலியர்கள் என்றாலே அன்பும் அரவணைப்பும் கண்ணென தகும்.
-NCM with Ramajayam

Thanks: Dina malar

0 comments

கருத்துரையிடுக